காஸாவில் 24 பேர் பலி: நாசர் மருத்துவனை

காஸாவில் 24 பேர் பலி: நாசர் மருத்துவனை

2 mins read
0243cd50-a7c8-4398-8113-a9111795d217
உதவி பெற வந்த தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன பெண்ணும் அவரது மகளும் கதறி அழுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காஸா: உதவிப் பொருள்களை விநியோகிக்கும் நிலையத்துக்கு அருகே 24 பேர் கொல்லப்பட்டதாக தெற்கு காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனை தெரிவித்தது.

சனிக்கிழமை (ஜூலை 12) உணவைப் பெற முயற்சி செய்தபோது அவர்கள் மீது இஸ்ரேலியத் துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சம்பவத்தின்போது அங்கிருந்த பாலஸ்தீனர்கள் கூறினர்.

ஆனால் தனிப்பட்ட யாரும் காயம் அடையவில்லை என்று இஸ்ரேலியத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இஸ்ரேலியத் தற்காப்புப் படைக்கு அச்சுறுத்தலாக இருந்த மக்களை எசசரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

இருதரப்பு கூற்றுகளைச் சரிபார்க்க முடியவில்லை. பிபிசி உட்பட அனைத்துலக செய்தி நிறுவனங்களை காஸாவிற்குள் இஸ்ரேல் அனுமதிப்பதில்லை என்று பிபிசி தகவல் குறிப்பிட்டது.

சனிக்கிழமை பிபிசி பார்த்த காணொளியில் நாசர் மருத்துவமனையின் வாயிலுக்கு அருகே பைகளில் வைக்கப்பட்ட உடல்களை ரத்தக்கறை படிந்த பொதுமக்களும் தாதியரும் சூழ்ந்திருந்ததைக் காண முடிந்தது.

மற்றொரு காணொளியில் உதவி பெறுவதற்காகக் காத்திருந்த மக்கள் மீது ஐந்து நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ஒருவர் கூறினார். மருத்துவ உதவியாளர் ஒருவர், இஸ்ரேல் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

இரண்டு காணொளித் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே பாலஸ்தீனப் பகுதியில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் இஸ்ரேலும் ஹமாசும் தடையாக இருப்பதாக ஒன்றையொன்று குற்றம்சாட்டியிருப்பதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

கத்தாரில் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளை அறிந்த ஒரு பாலஸ்தீன வட்டாரம், போரினால் பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் தனது படைகளை வைத்திருக்க இஸ்ரேல் வற்புறுத்துவதால் 60 நாள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஊசலாடுவதாக ஏஎஃப்பியிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்