பாகிஸ்தானின் காஷ்மீரில் ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச்சூடு; 12 பேர் மரணம்

பாகிஸ்தானின் காஷ்மீரில் ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச்சூடு; 12 பேர் மரணம்

2 mins read
6af2bdd6-dc40-4fcb-aa66-281481c90f5a
பாகிஸ்தானின் முஸாஃபராபாத்தில்வ ன்செயல்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

வன்முறையை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மேலும் 200 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் காஷ்மீரில் இந்தியாவின் காஷ்மீர் மக்கள் ஏராளமானோர் அகதிகளாக உள்ளனர். அவர்களுக்காக 12 சட்டமன்றத் தொகுதிகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஒதுக்கி உள்ளது.

ஆனால், அந்த சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருதரப்பினர் போராடி வருகின்றனர்.

மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு வரிச் சலுகை, உணவு மானியம் மற்றும் மின்சார மானியம் வழங்கப்பட வேண்டும், நிறுத்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (AAC) அந்தப் போராட்டத்தை வழிநடத்துகிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான 38 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) முதல் அந்த அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

அவர்களின் போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகத் திரும்பியது.

தாட்யால் என்னும் பகுதியில் ராணுவத்தினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

முஸாஃபராபாத், ராவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு, கோட்லி ஆகிய வட்டாரங்களுக்கும் வன்செயல்கள் பரவின.

பதற்றமும் பீதியும் அதிகரித்ததைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முஸாஃபராபாத், தீர்கோட் ஆகிய பகுதிகளில் தலா ஐவரும் தாட்யாலில் இருவரும் உயிரிழந்தனர்.

காவல்துறை தரப்பில் மூவர் மாண்டனர்; ஒன்பது பேர் காயமடைந்தனர்.

மூன்று நாள்களாக அந்த வட்டாரம் போராட்டக்களமாகக் காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சம் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்