உக்ரேன் போரில் இந்திய மாணவர் மரணம்

உக்ரேன் போரில் இந்திய மாணவர் மரணம்

2 mins read
5e7aa657-6ecd-4971-8e1d-3e2114f76c3e
உக்ரேனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு இன்று காலை புதுடெல்லி விமான நிலையம் வந்திறங்கிய மாணவியை இவருடைய உறவினர்கள் வரவேற்றனர். படம்: இபிஏ -
Google News Preferred Icon

உக்ரேனின் கார்கிவ் நகரில் போர் விமானங்கள் குண்டு வீசியதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மாண்டுவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

"ரஷ்யப் படைகள் நுழைந்துள்ள கார்கிவ் நகரில் இருந்தும் போர் மூண்டிருக்கும் இதர நகரங்களில் இருந்தும் உடனே வெளியேறுமாறு இந்திய நாட்டவருக்கு வலியுறுத்துமாறு உக்ரேனிலும் ரஷ்யாவிலும் உள்ள தூதர்களை வெளியுறவுச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்," என அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) தமது டுவிட்டர் பதிவில் கூறினார்.

உக்ரேனில் தங்கியுள்ள 14,000க்கும் மேற்பட்ட இந்தியர்களில் சுமார் 1,400 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அங்கு இருந்த இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இவ்வாறு விமானம் வழியாக மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை ஏழு மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ருமேனியத் தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து மீட்கப்பட்ட 182 பேர் இன்று காலை மும்பை வந்திறங்கினர். மீட்புப் பணிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திங்கள் முதல் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ என தனியார் விமானங்களும் இந்தப் பணியில் இறங்கியுள்ளன.

உக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளில் 24 மணிநேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் அந்த நாடுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.