ஆய்வு: சிங்கப்பூரில் 40% ஊழியர்களுக்கு வேலை இடத்தில் பாலியல் தொல்லை

ஆய்வு: சிங்கப்பூரில் 40% ஊழியர்களுக்கு வேலை இடத்தில் பாலியல் தொல்லை

2 mins read
74cc4e25-db6b-4b76-b010-8a898b0705ad
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வேலையிட பாலியல் தொல்லைகள் பற்றி முதல்தடவையாக தேசிய அளவில் பிரதிநிதித்துவம் பெற்ற ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட ஊழியர்களில் ஐந்து பேரில் இரண்டு பேர்- அதாவது 40 விழுக்காட்டினர் தாங்கள், கடந்த ஐந்தாண்டு காலத்தில் அலுவலகத்தில் கசப்பான பாலியல் சம்பவங்களை அனுபவித்த தாகத் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய அலைக்கழிப்புகளுக்கு ஆளானவர்களில் மூவரில் ஏறக்குறைய ஒருவர், தங்களுடைய முதலாளி அல்லது தங்களைவிட உயர் பதவிகளில் இருப்பவரே அத்தகைய தொல்லைகளைத் தங்களுக்குக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் மூவரில் ஒருவர் மட்டுமே முதலாளியிடம் அல்லது மேல் அதிகாரியிடம் அல்லது மனிதவளத் துறையிடம் புகார் தெரிவித்தனர் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

'இப்சோஸ்' (Ipsos) என்ற சந்தை பகுப்பாய்வு நிறுவனமும் ஆண்-பெண் சமத்துவத்திற்குப் பாடுபடும் 'அவேர்' அமைப்பும் சேர்ந்து அந்த ஆய்வை நடத்தின.

வேலை பார்க்கின்ற ஆடவர்கள், பெண்கள் என மொத்தம் 1,000 சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கி சென்ற ஆண்டு நவம்பரில் ஆய்வு இணையம் வழி நடத்தப்பட்டதாக அவேர் அமைப்பு இன்றைய அறிக்கையில் தெரிவித்தது.

பாலியல் ரீதியிலான கசப்பான சம்பவங்களை அனுபவித்ததாக தெரிவித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு ஆபாசமான குறிப்புகள், படங்கள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைத்ததாகவும் அவை தங்களுக்குச் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

தோற்றம், உடலமைப்பு அல்லது பாலினச் செய்கைகள் பற்றி தங்களிடம் கேள்வி கேட்கப்பட்டதாகவும் அல்லது ஆபாச தகவல்கள் தங்கள் காதுகளை எட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சுமார் 13 விழுக்காட்டினர் தாங்கள் முறையற்ற ரீதியில் தீண்டப்பட்டதாகத் தெரிவித்தனர். இத்தகைய சம்பவங்களை எல்லாம் மறந்துவிட விரும்பியதால் அது பற்றி புகார் தெரிவிக்கவில்லை என்றும் பலரும் கூறினர். அல்லது போதிய சாட்சியம் இல்லை என்று சிலர் தெரிவித்தனர்.

பாலியல் தொல்லை சம்பவங்களில் சுமார் 40% பற்றி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து குற்றவாளி கள் வேறு வேலைகளில் பிரித்துவிடப்பட்டனர். அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இருந்தாலும் இத்தகைய 20 விவகாரங்களில் குற்றச்செயல்களுக்கான சாட்சியம் இருந்தபோதும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த ஆய்வு முடிவுகள், வேலையிடங்களில் இடம்பெறும் பாலியல் தொல்லைகள் அவசரமான ஒரு பிரச்சினை என்பதையே மறுஉறுதிப்படுத்துவதாகஅவேர் அமைப்பு தெரிவித்தது.

இந்த அமைப்பு 2019ல் ஆலோசனைச் சேவை ஒன்றைத் தொடங்கியது. வேலையிடத்தில் பாலியல் தொல்லைகளை எதிர்நோக்குவோருக்கு அந்தச் சேவை ஆதரவு அளித்து உதவும்.

குறிப்புச் சொற்கள்