சாக்கடைக் குழிக்குள் பாய்ந்த கார்

சாக்கடைக் குழிக்குள் பாய்ந்த கார்

1 mins read
0d0b78c3-d273-47e1-a2a9-2c02abb656d1
-
Google News Preferred Icon

மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவில் கட்டு மானப் பணிகள் நிறைவுபெறாத சாக்கடைக் குழிக்குள் காருடன் கவிழ்ந்த இருவரைத் தீயணைப்பாளர்கள் உயிருடன் மீட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. மீட்புப் படையினர் கயிறு மூலம் குழிக்குள் இறங்கி காரினுள் இருந்தபடி உள்ளே சிக்கிக்கொண்ட இருவரை யும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஒரு தீயணைப்பு வாகனத்தையும் ஆறு தீய ணைப்பு வீரர்களையும் அனுப்பியதாக தாமான் சாரா தீயணைப்பு நிலையத் தலைவர் ராம்லி ஹாருண் சொன்னார். குழிக்குள் விழுந்து கிடந்த டொயொட்டா வையோஸ் காரின் கண்ணாடியை உடைத்து, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்க ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

அவ்விருவரும் உடலில் பல இடங்களில் காயமடைந்து இருந்ததால் சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் இருந்து பாரந்தூக்கி வரவழைக்கப்பட்டு, குழிக்குள் விழுந்து சேதமடைந்த கார் பிற்பகல் 3.45 மணியளவில் மேலே கொண்டு வரப்பட்டது. சம்பவத்தை நேரில் பார்த்த கட்டுமானப் பொறியாளர் பிரேம் வேலாயுதன் கோபால் கூறுகையில், "கட்டுமானத் தளத்தில் பிளாஸ்டிக் தடுப்புகளுக்குப் பதிலாக கான்கிரீட் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம்," என்றார். படம்: த ஸ்டார்