விநாயகர் சதுர்த்திக்கு பரபரப்பாக தயாராகும் சிங்கப்பூரர்கள்

விநாயகர் சதுர்த்திக்கு பரபரப்பாக தயாராகும் சிங்கப்பூரர்கள்

2 mins read
Google News Preferred Icon

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் சிங்கப்பூர் இந்துக்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகையாக அமைகிறது. இவ்வாண்டு நாளை விநாயகர் சதுர்த்து. பிள்ளையார் சிலைகளையும் தேவையான பொருள்களையும் வாங்க நேற்றும் இன்றும் லிட்டில் இந்தியாவில் கூட்டம் அலைமோதியது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் செம்பு, பித்தளையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளைத் தவிர்த்து களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

இச்சிலைகள் இரசாயன பொருள்கள் ஏதும் கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை கடலில் கரைக்கப்படும்போது புவிக்கு சேதம் விளைவிக்காது என நம்பப்படுகின்றது. லிட்டில் இந்தியா ஆர்கேடிலுள்ள சிறு கடைகளிலும் ஜோதி புஷ்பக் கடையிலும் இவ்வழகு சிலைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

இங்கு விற்கப்படும் விநாயகர் களிமண் சிலைகள் சுமார் $10 வெள்ளி முதல் $250 வெள்ளி வரை விற்கப்பட்டு வருகின்றன. இச்சிலைகள் சென்ற மாதமே தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைக்கப்பட்டன. சிலைகள் வந்தடைந்த நாள் முதல் பொதுமக்கள் இவற்றை வாங்குவதற்கு முன்பதிவு செய்ய ஆரம்பிப்பர்.

"களிமண் சிலைகளுக்கு அப்பால், இந்துக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தங்கள் சாமி அறையை அலங்கரிப்பதற்கு புதிய அலங்கார விநாயகர் சிலைகளையும் விநாயகரின் வாகனச் சிலைகள், ஆபரணங்கள் ஆகியவற்றையும் வாங்குவர்," என்றார் ஜோதி புஷ்பக் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

விநாயகர் சதுர்த்தி ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகரின் பிறந்தநாளை கொண்டாடும் சிறப்பு பண்டிகையாகும். வினைத் தீர்க்கும் கடவுளாக போற்றப்படும் விநாயகரை கொண்டாடும் இப்பண்டிகை, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ஆந்திரா,கர்நாடகா என பல இந்திய மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக பத்து நாள்கள் வரைகூட கொண்டாடப்பட்டு வருகின்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்துக்கள் கடலுக்குச் சென்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைக் கரைப்பது வழக்கம். இதற்கு, இயற்கையை காக்கும் முக்கிய காரணம் உள்ளது.

ஆடிப்பெருக்கு காலத்தின்போது வெள்ளம் ஏற்பட்டு அது ஆற்றிலுள்ள மண்ணை கரைத்துவிடுவதால் இம்மண் நீர் நிலத்தில் இறங்கிவிடாமல் கடலை சென்றடைகின்றது. மாறாக, களிமண் இருக்கும் இடங்களில் நீர் பூமியில் இறங்கிவிடும் என்று விளக்கப்பட்டுள்ளது. எனவே, களிமண் சிலைகளை விநாயகர் சதுர்த்தியன்று கரைக்கும்போது ஈரமான இக்களிமண் விரைவாக கரைந்து நீரில் இருக்கும். ஆனால், காய்ந்துவிட்ட களிமண் அதே இடத்தில் படிந்துவிடும். எனவே, ஆற்றிலிருந்து கிடைக்கும் நீர் பூமியில் நிலத்தடி நீராக மாறி பொதுமக்களின் குடிநீர் சிக்கலை தீர்க்கும். இவ்வாறே கடலில் இச்சிலைகளை கரைக்கும் வழக்கம் பிறந்தது என்று நம்புகின்றனர், பக்தர்கள்.