நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் இலங்கை முடங்கியது

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் இலங்கை முடங்கியது

1 mins read
Google News Preferred Icon

இலங்கை அதிபர் கோத்தபயாவும் அவரது அண்ணனும் பதவி விலகவேண்டும் என்று கூறி, நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் வியாழன் (ஏப்ரல் 28) அன்று நாடு முழுவதும்வேலை நிறுத்தம் செய்தன.

பொதுப் போக்குவரத்து முடங்கியது; கடைகள், அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை மூடியிருந்தன.

ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்துகொண்டதால் கொழும்பில் பள்ளிகளும் மூடப்பட்டன.

அதே போல வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்ததால் வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை.

-

"கோத்தா வீட்டுக்குப் போ," என்ற முழக்கங்கள் சாலைகளில் ஒலித்தன.

ராஜபக்சேக்களுக்கு எதிராக கொழும்பில் தொடர்ந்து 20வது நாளாக இன்று ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் பல்லாயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நாடே முடங்கிப் போயிருப்பது இதுவே முதல் முறை.

நாட்டின் பொருளியல், அரசியல் நெருக்கடியைப் பற்றி விவாதிக்க, அதிபர் கோத்தபயா ராஜபக்சே பிற அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாளை சந்திப்பு நடத்தவுள்ளார்.

அவரது அண்ணனான பிரதமர் மகிந்த ராஜபக்சே தன்னை பதவியிலிருந்து நீக்க முடியாது என்று புதன்கிழமை அன்று கூறினார்.

ஆனால் அதிபரும் அரசாங்கமும் பதவி விலகவில்லை என்றால் மே 6ஆம் தேதி முதல் கால வரையறை இன்றி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.