திருச்சி: முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தமிழக அரசு தங்களுக்குப் பல வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்துவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனால் விஜய்யின் பிரசாரத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தவெக தெரிவித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜய், எந்தவிதமான புலம்பல், புகார்களையும் எழுப்பாமல், அமைதியாக வாக்குச் சேகரிக்கிறார்.
கட்சித் தலைவர் விஜய் நேரில் வந்து பிரசாரத்தில் ஈடுபட இப்போது வாய்ப்பில்லை என்பதால் அவர் முடங்கிவிடவில்லை.
தனது பிரசாரத்தின்போது விஜய் உடன் இருக்க வேண்டும் என மற்ற வேட்பாளர்களைப் போல் இவரும் விரும்பினார். அதனால் விஜய்யைப் போன்றே அச்சு அசலாக ஒரு சிலையை ஏற்பாடு செய்துள்ளார் வேட்பாளர் நவல்பட்டு விஜய்.
பிரசார வாகனத்தில் நின்றபடி இவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது அருகே விஜய்யின் ஆளுயரச் சிலை காணப்படுகிறது. சட்டெனப் பார்க்கும்போது விஜய் உண்மையாகவே அந்த வாகனத்தில் வலம் வருவதுபோல் தோன்றுவதாகப் பலரும் கூறியுள்ளனர்.
அதேநேரம், சமூக ஊடகங்களில் சிலரது எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளார் வேட்பாளர் நவல்பட்டு விஜய்.

