தவெகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததால் திருச்சியில் சலசலப்பு

தவெகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததால் திருச்சியில் சலசலப்பு

1 mins read
d5fc7fc6-f809-473b-905b-582a14bb7388
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருச்சி: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஞாயிறு (5.10.2025) திமுகவில் இணைந்தனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்கள், மாநகரப் பகுதிகளில் உள்ள தவெக நிர்வாகிகளைத் தி.மு.க.வுக்கு ஈர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தவெகவில் இருந்து வெளியேறும் முடிவைச் சில நிர்வாகிகள் எடுத்துள்ளனர்.

இதையடுத்து, தவெகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான கபிலன், காமேஷ் உள்ளிட்ட பலர், தவெக தொண்டர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்தனர்.

அப்போது, அவர்கள் தங்களை அடிப்படை உறுப்பினர்களாகத் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை திமுகவுக்கு வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து கட்சியில் சேர்த்துக் கொண்டார்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே, முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்திருப்பது திருச்சியிலும் தமிழக வெற்றிக் கழக வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்