தேனி: வெறிநாய் கடித்து சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்த சம்பவம் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள ஆலந்தளிர், குமணன் தொழு என்ற சிற்றூர்களில் கடந்த சில நாள்களாக வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவ்விரு ஊர்களிலும் இதுவரை 15 பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்குக் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சங்கரன்கோவில் அருகே சீவலராயனேந்தலைச் சேர்ந்த பாப்பாத்தி எனும் 101 வயது மூதாட்டியை வெறிநாய் கடித்துவிட்டது.
சனிக்கிழமையன்று (மே 11) வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பாப்பாத்திமீது வெறிநாய் ஒன்று பாய்ந்து கடித்துக் குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டி, அவரை மீட்டனர்.
சில நாள்களுக்குமுன் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததால் ஐந்து வயதுச் சிறுமி படுகாயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சில நாள்களுக்குமுன் தெருநாய் விரட்டி விரட்டிக் கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 12 பேர் காயமுற்றனர்.

