டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கலாம்: உயர் நீதிமன்றம்

டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கலாம்: உயர் நீதிமன்றம்

2 mins read
9b5f1651-c21a-452b-ae0d-fa70ed5763bb
டி.எம்.கிருஷ்ணா, எம்.எஸ்.சுப்புலட்சுமி. - படம்: இணையம்
Google News Preferred Icon

சென்னை: சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2005ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சுப்புலட்சுமி பெயரில் வழங்கக்கூடாது என சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கத் தடை விதித்தார்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில் தனக்கு நினைவிடம், தனது பெயரில் அறக்கட்டளை அமைக்கக்கூடாது என சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ள நிலையில், அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது என தெரிவித்தனர். மேலும் சுப்புலட்சுமியை, டி.எம்.கிருஷ்ணா மோசமான வார்த்களைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், கடந்த பத்தாண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், விருது வழங்கக்கூடாது என தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டில் கூறினர். மேலும், சொத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும், விருதுக்குப் பொருந்தாது எனவும் தெரிவித்தனர்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்