கஞ்சா பழக்கம் இல்லை; அரசியல் பிரமுகர்கள் உதவுகிறார்கள்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்

கஞ்சா பழக்கம் இல்லை; அரசியல் பிரமுகர்கள் உதவுகிறார்கள்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்

1 mins read
85729680-fc9c-4824-b674-a2a0725ce1c8
காவல்துறையிடம் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்தார் சவுக்கு சங்கர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதாகியுள்ள செய்தியாளரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த தங்குவிடுதி அறை, காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கஞ்சா வழக்கில் அவர் கைதானார்.

இந்நிலையில், தேனி மாவட்டக் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது நூறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவற்றுக்கு அவர் பதில் அளித்ததாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

தமக்கு கஞ்சா பழக்கம் அறவே இல்லை என்று சங்கர் தெரிவித்துள்ளார்.

தம்முடைய கார் ஓட்டுநரும் உதவியாளரும் காவல்துறையிடம் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்திருப்பதாகவும் அதற்கான பின்னணி குறித்து தமக்குத் தெரியவில்லை என்றும் சவுக்கு சங்கர் கூறியதாக தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அமலாக்கத்துறை, தமிழக அரசு அதிகாரிகள் சிலர் தம்முடன் நட்பு பாராட்டி வருவ தாகவும் சங்கர் கூறியுள்ளார்.

சில அரசியல்வாதிகள், தமக்கு தகவல் தருபவர்கள் உள்ளிட்டோர் தனக்குப் பண உதவி செய்து வருவதாகவும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்திருப்பதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சவுக்கு சங்கருக்கு பண உதவி செய்வோர் குறித்து காவல்துறை விசாரிப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்