போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர்

போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர்

2 mins read
069bfb9f-9d29-4745-9bec-aa590bd0b90a
போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அண்டை மாநிலங்களின் வழியாக போதைப்பொருள் தமிழகத்துக்கு எளிதில் கொண்டு வந்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருளை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தலைமைச் செயலகம் சென்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா, காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண், காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் ஆணையர் அமல்ராஜ், ஆவடி ஆணையர் சங்கர் மற்றும் போதை தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் போதைப்பொருளை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என அண்டை மாநில எல்லைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும்.

துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்