தமிழகம், புதுவையில் 20 இடங்களில் வெயில் 37 டிகிரி: கரூர் பரமத்தியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக 43.9 டிகிரி பதிவு

தமிழகம், புதுவையில் 20 இடங்களில் வெயில் 37 டிகிரி: கரூர் பரமத்தியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக 43.9 டிகிரி பதிவு

2 mins read
e1023453-c23d-4d86-86a5-51efe510c6d8
பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்நினோ பாதிப்புகள் தொடர்ந்து நிலவி வருவதால், பல நகரங்களில் வெப்பநிலை அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் பிறந்த உடனே பல நகரங்களில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது. 37.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் பதிவான இடங்களின் எண்ணிக்கை நேற்று 20ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கரூர் பரமத்தியில் 43.9 டிகிரி செல்சியஸ், ஈரோடு, வேலூரில் 43.9 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கடலோர நகரங்களான சென்னை நுங்கம்பாக்கம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு முதன்முறையாக 37.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

மற்ற நகரங்களில் பதிவான வெயில் அளவுகளின்படி, திருச்சியில் 42.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 42.4 டிகிரி செல்சியஸ், தருமபுரி, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 41.1 டிகிரி செல்சியஸ், சென்னை - மீனம்பாக்கத்தில் 40.5 டிகிரி செல்சியஸ், கடலூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 40 டிகிரி, கோவையில் 39.4 டிகிரி, சென்னை - நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 38.8 டிகிரி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 37.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது: “பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்நினோ பாதிப்புகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. தற்போது கிழக்குத் திசை காற்று வீசுவது குறைந்து, மேற்குத் திசை தரைக்காற்று, தெற்கு மற்றும் தென்மேற்குத் திசை தரைக் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் புதன்கிழமை பல நகரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

புதன்கிழமை (மே 1) அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 43.8 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1985ஆம் ஆண்டு 41.6 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. மேற்கூறிய காரணங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மண் சூடாகும் தன்மை போன்ற உள்ளூர் அளவிலான காரணங்களால் கரூர் பரமத்தியில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் இன்று முதல் 5ஆம் தேதிவரை ஒரு சில இடங்களில் 42.7 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும். இப்பகுதிகளில் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நீடிக்கும். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி, கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38.8 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்