கொலை மிரட்டல் விடுத்ததாக அரசியல் விமர்சகர் ’சவுக்கு’ சங்கர் மீது வழக்குப்பதிவு

கொலை மிரட்டல் விடுத்ததாக அரசியல் விமர்சகர் ’சவுக்கு’ சங்கர் மீது வழக்குப்பதிவு

2 mins read
740b3c65-79ab-4622-b27a-0ba4d0c7fc5d
 ‘சவுக்கு’ சங்கர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: அரசியல் விமர்சகர் ’சவுக்கு’ சங்கர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் தம்மை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சி நடப்பதாக ’சவுக்கு’ சங்கர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்து ‘சவுக்கு’ சங்கர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இது தொடர்பான அவரது காணொளிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன.

இதையடுத்து காவல்துறை அவரைக் கைது செய்தது. சில மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நாள்தோறும் அவர் புதிய காணொளிகளை வெளியிடத் தொடங்கினார்.

பரந்தூர் பகுதியில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ‘சவுக்கு’ சங்கர் தமது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். அவர் தனியாகச் சென்று போராட்டத்தில் பங்கேற்க மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்தது.

ஆனால் தடையை மீறி மேலும் சிலரை ‘சவுக்கு’ சங்கர் தம்முடன் அழைத்துச் சென்றதால் காவல் துறையினருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் கொலைமிரட்டல் விடுத்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

இந்த வழக்கின் மூலம் அவர் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘சவுக்கு’ சங்கர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், தாம் இந்த வழக்குக்காக முன்பிணை பெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை என்னைச் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்” என்று ‘சவுக்கு’ சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்