சாதிப்பெயரைக் குறிப்பிட்டு அழைப்பாணை: அமலாக்கத்துறைக்கு சீமான் கடும் கண்டனம்

சாதிப்பெயரைக் குறிப்பிட்டு அழைப்பாணை: அமலாக்கத்துறைக்கு சீமான் கடும் கண்டனம்

1 mins read
eb5cb92e-440e-4f6f-b0f2-dad912ffe224
சீமான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: அமலாக்கத்துறை சாதிப்பெயரைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்புவது பெரும் அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அவர்களது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருப்பதை அவர் கண்டித்துள்ளார்.

இந்துத்துவ கொள்கைக்கு எதிரானவர்களையும் மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் மத்திய அரசு பழிவாங்குவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள சீமான், அமலாக்கத் துறைக்கு அதிக அதிகாரமும் சுதந்திரமும் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“இத்தகைய போக்கின் விளைவாக இந்திய அளவில் முறைகேடுகள் நிறைந்த அமைப்பாக அமலாக்கத்துறை மாறிவிட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எளிய மக்களை மிரட்டும் கொடும் போக்கினை அமலாக்கத்துறை கைவிட வேண்டும்.

“இந்திய அரசியல் அமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், குற்றப் புலனாய்வுத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது என சீமான் கூறியுள்ளார்.

சாதிய வன்மத்துடன் ஆத்தூர் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை அமலாக்கத்துறை உடனடியாக திரும்பப் பெறுவதுடன் விவசாயிகளிடம் இது தொடர்பாக வெளிப்படையாக மன்னிப்பும் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்