மத்தியக் குழு தமிழகம் வருகை; தென் மாவட்டங்களில் கனமழையால் 10 பேர் மரணம்

மத்தியக் குழு தமிழகம் வருகை; தென் மாவட்டங்களில் கனமழையால் 10 பேர் மரணம்

2 mins read
9fd4646c-1749-4c6d-a921-c02d09cccf51
தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கிய நீரில் மீன் பிடித்த சிறுவர்கள். பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் வெயில் அடிக்கிறது. சில இடங்களில் வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தூத்துக்குடி: தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையிலான ஐவர் கொண்ட குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான குழுவினருக்குப் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.

ஆய்வுக்கு பின் வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது.

அண்மைய புதுத் தகவல்கள்:

[ο] திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் சுவர் இடிந்தும் சிலர் மின்சாரம் தாக்கியும் பலியாகினர்.

[ο] 48 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவித்த 800 பயணிகள் மத்திய-மாநில பேரிடர் மீட்புப் படைகள், விமானப்படையினரால் மீட்கப்பட்டனர்.

[ο] தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைப்புகள், ஆயுதப்படைகளின் தனிக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசின் எந்த அதிகாரியும் பங்கேற்கவில்லை.

[ο] முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கனமழை, மிச்சாங் புயலால் ஏற்பட்ட சேதங்களை இயற்கைப் பேரிடராக அறிவிக்கும்படி கோரிக்கை மனு அளித்தார். மேலும், பேரிடர் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். 100 ஆண்டு கால வரலாற்றில் இடைவிடாத மழையால் ஏற்பட்ட சேதத்தை தமிழகம் இதுவரை கண்டதில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.

[ο] கடற்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

[ο] மாநிலத்தின் தென் மாவட்டங்களில் கடற்படை, விமானப்படை, மத்திய-மாநில அரசு நிறுவனங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,343 பணியாளர்கள் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

[ο] இதுவரை 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 17,000 பேர் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சுமார் 34,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

[ο] இதுவரை ஒன்பது ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் மேலும் ஒரு ஹெலிகாப்டர் வர வாய்ப்பு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

[ο] வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்களை பரிசோதனை செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை வழங்க 133 நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்