அதிகாரிகளை சிறையில் அடையுங்கள்: அன்புமணி

அதிகாரிகளை சிறையில் அடையுங்கள்: அன்புமணி

2 mins read
af2e26b1-c6f2-4643-a981-bb9bb86e01c1
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: ஆக்கிரமிப்பு இடங் களில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையைச் சுற்றி 100 கி.மீ. பரப்பளவில், பத்து ஏரிகளை ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரிகளாக உருவாக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“மன்னர்கள்தான் ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றில்லை. மக்களாட்சியில் உருவாக்கக் கூடாதா,” என்று பாமக தலைவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் தோல்வி என்று தாம் கருதுவதாக குறிப்பிட்டுள்ள அவர், 200 முதல் 300 ஏரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டன என்றார்.

“அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏரி ஆக்கிரமிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளனர். நீர் நிலைகளின் மேல் மண்ணைக் கொட்டி நிரப்பி வருகின்றனர். இதற்கு அனுமதியளித்த அதிகாரிகளை சிறையில் தள்ளுங்கள். அப்போதுதான் பயம் வரும். அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யும் நடவடிக்கை எல்லாம் பலன் தராது,” என்று அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்தார்.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று குறிப்பிட்ட அவர், அதை எங்கே அமைப்பது என்பதுதான் கேள்வி என்றார்.

“பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க 4,800 ஏக்கர் மட்டுமே தேவை என்று முதலில் கூறினர். ஆனால் தற்போது 5,700 ஏக்கர் தேவை என்று கூறுகிறார்கள்.

“கூடுதலாக ஆயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்தப் போகிறோம் என்று கூறுகிறார்கள். எனவே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கக் கூடாது. திருப்போரூர் பகுதியில் 5,000 ஏக்கர் அரசு நிலம் தரிசு இருக்கின்றது. அங்கே அமைக்க வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள்,” என்றார் அன்புமணி ராமதாஸ்.

குறிப்புச் சொற்கள்