‘காவிரிக் கரையிலிருந்து இந்தியாவின் வரலாற்றை எழுதவேண்டும்’

‘காவிரிக் கரையிலிருந்து இந்தியாவின் வரலாற்றை எழுதவேண்டும்’

1 mins read
e65a06e1-1c5a-473b-bd1c-6bb69816e8e3
தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் சென்ற வியாழக்கிழமை நடந்த ‘அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் கருத்தரங்கில் தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தஞ்சாவூர்: இந்தியாவின் வரலாற்றை கங்கைச் சமவெளியில் இருந்து எழுதாமல், காவிரிக் கரையிலிருந்து எழுதவேண்டும் என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமைக்கிழமை தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கு தொடக்கவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு கூறினார்.

கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, ‘அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு’ என்ற தலைப்பில் தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினார்.

அந்த உரையில், “தமிழகத்தின் வரலாறு முதன்முதலில் நமக்கு அன்பில் செப்பேடுகள் மூலம்தான் தெரியவந்தது. அதன் மூலம்தான் சோழர்களின் கொடை, ஆட்சிமுறைகள் போன்றவை வெளியுலகுக்கு தெரியவந்தன.

“இந்தியாவின் வரலாறு கங்கைச் சமவெளியில் இருந்து எழுதுவது அல்ல, அது காவிரிக் கரையில் இருந்து எழுதக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

“கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை, வைப்பாறு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கிச் செல்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

“தமிழரின் நாகரிகம், சமுதாயம் போன்றவை எப்படி இருந்தன, அவை எப்படி மறைக்கப்பட்டன என்பதை எல்லாம் நாம் அறிந்துகொண்டால்தான், எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும்,” என்று பேசினார்.

குறிப்புச் சொற்கள்