நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி

2 mins read
96bd7232-d993-4e5b-802f-a00a2d2821af
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துகுவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் விடுதலையான, விடுவிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வழக்குகளை எல்லாம் மறு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் தம்மை சிலர் வில்லனைப் போல் பார்ப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் இந்த வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது உண்மையில் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது,” என்றும் நீதிபதி தெரிவித்துள்ள கருத்து அரசியல், நீதித்துறை வட்டாரங்களில் புது விவாதங்களை எழுப்பி உள்ளது.

கடந்தகால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார் ஆனந்த் வெங்கடேஷ்.

அந்த வகையில் அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார்.

அமைச்சர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் இத்தகைய வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதும் அதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறைகளும் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உயர் நீதிமன்றம்