கோவை: சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த இருவர் கோவை விமான நிலையத்தில் சிக்கினர்.
இரு பயணிகளில் ஒருவர் எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் 395 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை தனது பெட்டியில் மறைத்து வைத்திருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மற்றொரு பயணி தனது உள்ளாடைக்குள் 359 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்திருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.45.31 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கடத்தலின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


