தக்காளி சட்னியை நிறுத்திய ஹோட்டல்கள்

தக்காளி சட்னியை நிறுத்திய ஹோட்டல்கள்

2 mins read
28e089bd-5184-46d2-a04a-731341c07b2d
தக்காளி - படம்: இணையம்
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கிறது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.

அத்துடன், வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இருக்கும்.

ஆனால் தற்பொழுது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஹோட்டல்களில் தக்காளி சட்னி கிடைப்பதில்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்றே வாடிக்கையாளர்களிடம் கூறப்படுகிறது.

குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது தக்காளி சட்னிக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. வரத்து அதிகரித்து விலை குறைந்த பிறகுதான் தக்காளி சட்னி என்று தெரிகிறது.

மேலும், மதிய சாப்பாட்டிலும் சில ஹோட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் ஹோட்டல்களுக்கு சாப்பிட செல்வோர் தக்காளி ரசத்தை கையில் வாங்கி குடிப்பதைக் காணலாம். ஆனால் இப்போது அது முடியாத ஒன்று.

ஆண்டிப்பட்டியிலும் விலை உயர்வைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்கள் தக்காளி சட்னியை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், தற்போது பாதிக்கும் கீழ் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கே தக்காளி பற்றாக்குறையாக உள்ளது. இதன் காரணமாகவே கடுமையாக விலை உயர்ந்துள்ளது என்று கூறுகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை நுகர்வோர் கடையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
காய்கறி