ஆதனின் பொம்மை: கீழடியின் பெருமையைப் பேசும் படைப்பு

ஆதனின் பொம்மை: கீழடியின் பெருமையைப் பேசும் படைப்பு

1 mins read
57d81abc-8caa-4ad9-aa46-8a75f1944aeb
ஆதனின் பொம்மை நூல், எழுத்தாளர் உதயசங்கர் - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழர்களின் நாகரிகம், தொன்மையைப் பறைசாற்றும் கீழடி குறித்து எழுதப்பட்டுள்ள ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அந்த நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

கீழடி குறித்து இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதாகவும் வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாம் அந்நாவலை எழுதியதாகவும் ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே விருது பெற்றுள்ள ‘ஆதனின் பொம்மை’ படைப்பானது கீழடியின் தொன்மையை குழந்தைகளின் அனுபவ உலகிற்குள் கொண்டு செல்லும் அருமையான படைப்பு என எழுத்தாளரும் மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நாவலுக்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதைக் தொகுப்பு குழந்தை தொழிலாளர்களின் உலகம் குறித்துப் பேசும் படைப்பாகும். இதை எழுதியுள்ள ராம்தங்கம் தமக்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளுக்கு சாகித்ய விருதுகள் வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்