சென்னை: அப்பா புதைத்து வைத்துள்ள பணம் காட்டில் இருக்கிறது என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ராஜா தயாரித்து இயக்கி நடித்துள்ள 'மாவீரன் பிள்ளை' படம் வாயிலாக மறைந்த சந்தன வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தில் பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவிப்பவராக அவர் நடித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் தாம் நடிக்கும் படம் பற்றி பேசிய விஜயலட்சுமி, "அப்பாவின் கதைக்கும் 'மாவீரன் பிள்ளை' படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது படம் வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவரது 'கெட்டப்'பில் உள்ள என் படம் சுவரொட்டியில் வெளி வந்தது. அப்பாவின் கதையைப் படமாக்க முடிந்தால் நிச்சயம் செய்வேன். இதற்காக, அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன். அப்பாவின் உண்மையான கதை, இன்னும் படமாக்கப்படவில்லை. நாளிதழ்களில் வந்த செய்தியை வைத்துதான் வீரப்பனின் வாழ்க்கை கதையை படம் எடுத்துள்ளனர். அப்பா புதைத்து வைத்த பணம் காட்டில் இருக்கிறது. ஆனால், இப்போது அது செல்லாது. எங்கு இருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது. அது, அப்பாவுக்கும் அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும்," என்று தெரிவித்தார்.

