‘திமுக ஆட்சி 2.0’ அமைவது உறுதி: ஸ்டாலின்

‘திமுக ஆட்சி 2.0’ அமைவது உறுதி: ஸ்டாலின்

1 mins read
dcf6a58e-f9af-4e21-ab36-9771cd5f67a8
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தர்மபுரி: யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், திமுக தலைமையில் மீண்டும் 2026ஆம் ஆண்டு ஆட்சி அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

அச்சமயம், அனைத்துக் காட்சி ஊடகங்களிலும், ‘திமுக ஆட்சி 2.0’ அமைந்தது என்பதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கும் என்று தர்மபுரியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மணியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“தேர்தலை அடிப்படையாக வைத்து, சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதிச் செயலை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதனைத் தடுக்கவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி வழக்கு தொடுப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

“தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்க மேற்கொள்ளப்படும் தந்திரம்,” என்றார் திரு ஸ்டாலின்.

பீகார் மாநிலத்தில் செய்ததுபோல் இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

“பாஜகவுக்கு பயந்து தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்.

“தேர்தல் ஆணைய நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதை இது காட்டுகிறது. ஆனால், அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்
திமுகஆட்சிதேர்தல்