சென்னை: தமிழகத்தில் மகளிர்க்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.2,000 கோடைக்கால சிறப்பு நிதி இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் கோடைக்கால உரிமைத்தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையும் மொத்தமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது.
இது குறித்து, எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே கொடுப்பதற்கு என்ன காரணம் என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் வேலு, கோடைக்காலத்தில் மக்களுக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே உரிமைத் தொகை வழங்கப்பட்டது என்றார். அடுத்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இனிவரும் ஆண்டுகளில் கோடைக்காலத்தில் மகளிர்க்கு ரூ.2,000 வழங்கப்படும் என்றார்.
மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராக பாஜக ஆதரவு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு வருகிறது.
எனினும், பணம் வழங்கும் திட்டங்கள் குறித்த கருத்துகளை நீதிமன்றம் தற்போதே வெளியிட தொடங்கியுள்ளது. மத்திய அரசின், 2024 மின்சார சட்டத் திருத்த விதிகளின் 23வது விதியை எதிர்த்து, தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு குறித்து வியாழக்கிழமை (பிப்ரவரி 19) நடந்த விசாரணையில், மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் சம்பாதித்து கண்ணியத்தையும் சுயமரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

