சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையங்களான T1, T4-ல் உள்ள கிட்டத்தட்ட 140 அவசர கால வெளியேறும் கதவுகள் மின்னணுப் பாதுகாப்பு, கண்காணிப்பு அமைப்புகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை, விமான நிலையத்தின் தீ பாதுகாப்பு தணிக்கையின்போது கண்டறியப்பட்ட சில முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக வந்துள்ளது.
முன்னர் இக்கதவுகளில் சங்கிலியும் பூட்டும் இருந்தன. அவசர நிலை ஏற்பட்டால் பயணிகள் விரைவாக வெளியேறும் வகையில் தற்போது புதிய மின்னணுக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கதவுகளுக்கான கட்டுப்பாடு, தீயணைப்புப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு (SOCC) வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.
T2 அனைத்துலக முனையத்தில், மின்னணு அவசர கால வெளியேறும் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அக்கதவுகள், அங்கீகரிக்கப்பட்டவர்களால் மட்டுமே திறக்க முடியும் என்பதால், அங்கீகரிக்கப்படாதவர்கள் உள்ளே நுழைவதையும் தடுக்க முடியும். இது விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு ஒரு கூடுதல் அரணாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

