சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கான முதற்கட்ட அஞ்சல் வாக்குப் பதிவு சனிக்கிழமை (ஏப்ரல் 18) விறுவிறுப்பாக நடைபெற்றது.
தேர்தல் பணிக்காக சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 22,248 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இரண்டு கட்டங்களாக அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்கெனவே அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. வில்லிவாக்கம், அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் அங்கு நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றதோடு, வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய, வாக்களிப்பு நிகழ்வுகள் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டன. முதற்கட்ட வாக்குப்பதிவில் விடுபட்ட காவலர்களுக்கான இரண்டாம் கட்ட அஞ்சல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற உள்ளது.
“தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் 100 விழுக்காடு தங்களது வாக்குகளைப் பதிவுசெய்ய வேண்டும். அவர்களில் யாரும் விடுபடாமல் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்,” என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் தெரிவித்துள்ளார்.

