சென்னை: தவெக சார்பில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் விஜய், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
அதிகாரிகள் சிலர், திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் திட்டமிட்டே தமது பிரசாரத்துக்கு இடையூறு செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் விஜய்.
முன்னதாக, சனிக்கிழமை (மார்ச் 28) அவர் திடீரென தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து தமது புகார் மனுவை அளித்தார்.
தவெக சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சியை நடத்த இயலவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் முல்லை நகர் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கவும் விஜய் திட்டமிட்டிருந்தார். பிரசாரக் கூட்டத்தில் 3,000 பங்கேற்பர் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட அப்பகுதியில் அதிகபட்சம் 300 பேர் மட்டுமே நிற்க முடியும் என்பதைக் காரணமாகக் கூறி, பிரசாரத்துக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதற்கு தவெக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் திடீரென பள்ளம் தோண்டப்பட்டு, இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
“நான் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும்போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணம் கூறி அனுமதி தர தாமதிப்பதும் அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. திமுக அரசு திட்டமிட்டு எனது பிரசாரத்தை முடக்குகிறது,” என்று சாடியுள்ளார் விஜய்.

