சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையிலிருந்து வியாழக்கிழமை (ஜனவரி 18)130 பேருடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் வெடித்தது.
ஆயினும், பயணிகள் அனைவரும் அவ்விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரவு 12.20 மணிக்குப் பறப்பதற்குத் தயாராக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தபோது எம்எச்181 விமானத்தின் பின்சக்கரம் வெடித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதனையடுத்து, விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளும் விமானப் பணியாளர்களும் சென்னை நகர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.
அவ்விமானம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) காலை புறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.


