கோவிலுக்குள் வெள்ளம்; கோயிலுக்கு வெளியே திருமணங்கள்

கோவிலுக்குள் வெள்ளம்; கோயிலுக்கு வெளியே திருமணங்கள்

1 mins read
7c0b8628-243d-47a2-afe2-326a53cfee1b
வெள்ளத்தில் மிதக்கும் குறுக்குத்துறை முருகன் கோயில். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

நெல்லை: நெல்லை மாவட்டம் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு நடைபெற இருந்த திருமணங்கள் கோயிலுக்கு வெளியே நடைபெற்றன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை நீடித்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறாததால் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சிற்றோடைகள், கால்வாய்கள், காற்றாற்று வெள்ளம் ஆகியவற்றின் நீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் புதன்கிழமை (நவம்பர் 20) மாலை முதல் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலையும் வெள்ளநீர் சூழ்ந்தது.

கோயிலின் கல்மண்டபத்தை பாதி மூழ்கடித்த நிலையில் வெள்ளம் ஆர்ப்பரித்துச் சென்றது.

கோயிலின் மூலஸ்தானத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அதனால், அந்தப் பகுதியில் பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வியாழக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் குறுக்குத்துறை முருகன் கோயிலில் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்க இருந்த நிலையில், மூலஸ்தானத்திற்குள் வெள்ளம் புகுந்தது.

அதனால், கோயிலின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள உற்சவர் முன்பாக திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்