அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட தமிழகக் கோயில் சிலைகள்

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட தமிழகக் கோயில் சிலைகள்

2 mins read
a1abdbb2-22f3-4bb2-bd6d-fed06ad09353
தமிழகக் கோயில்களுக்குத் திருப்பி அளிக்கப்பட உள்ள சோமாஸ்கந்தர், சுந்தரமூர்த்தி நாயனார்- பரவையார் நாச்சியார், நந்தி சிலைகள். - படம்: தினமலர்

திருச்சி: வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தொல்பொருள்களை மீட்டெடுக்கும் தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலைகளை பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தப்படி, மத்திய அரசிடம் ஒப்படைக்க தொடர்புடைய ஏல நிறுவனங்களும் அரும்பொளுளகங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. அச்சிலைகள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் எனக் காவல்துறை கூறியது.

காணாமல் போன உலோக, கற்சிலைகள் உலகப் புகழ்பெற்ற அரும்பொருளகங்களிலும் ஏல நிறுவனங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட, தூதரக முயற்சிகளின் பலனாக ஆஸ்திரேலியா 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று சிலைகளைத் திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது.

அவை ஆஸ்திரேலியா, கேன்பரா நகரில் உள்ள நேஷனல் கேலரியில் இருக்கும் ₹2 கோடி மதிப்புடைய திரிசூல மங்கள காளி சிலை, திருவாரூர் மாவட்டம் கடுவாங்குடியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான ₹4 கோடி மதிப்புடைய நந்தி சிலை, தஞ்சாவூர் மாவட்டம், மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலைச் சேர்ந்த ₹2 கோடி மதிப்புடைய ஆறுமுகம் கொண்ட ஸ்கந்தர் (சுப்பிரமணியர்) கற்சிலை ஆகியவை ஆகும்.

திரிசூல மங்கள காளி சிலை, ஆறுமுகம் கொண்ட சுப்பிரமணியர் சிலைகள்.
திரிசூல மங்கள காளி சிலை, ஆறுமுகம் கொண்ட சுப்பிரமணியர் சிலைகள். - படம்: தினமலர்

அதேபோல், அமெரிக்கா இரண்டு சிலைகளை ஒப்படைக்கச் சம்மதித்துள்ளது.

அவை கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருள்மிகு நரீஸ்வரர் சிவன் கோயிலுக்குச் சொந்தமான சுந்தரமூர்த்தி நாயனார்- பரவையார் நாச்சியார் சிலை, திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள அருள்மிகு விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 12, 13ஆம் நுாற்றாண்டை சேர்ந்த சோமாஸ்கந்தர் சிலைகள் ஆகும். அமெரிக்காவின் தேசிய ஆசிய கலைகள் அரும்பொருளகத்தில் உள்ள (National Museum of Asian Art) அச்சிலைகள் உள்ளன.

தமிழகக் கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள், கலைப் பொருள்களை மீட்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர் நடவடிக்கை மேற்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்