கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் கட்சித் தொண்டர்களுக்கு மணமுடித்து வைத்து மகிழ்ந்தார் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன்
அவர் விசிக வேட்பாளரை ஆதரித்து, காட்டுமன்னார்கோவில் செட்டித் தெருவில் புதன்கிழமை (ஏப்ரல் 15) இரவு கூட்டத்தில் பேசினார்.
அப்போது குமராட்சி ஒன்றிய விசிக பொருளாளர் நடுத்திட்டை சேர்ந்த சங்கர், செல்வராஜன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்பவருடன் கழுத்தில் மாலையுடன் திருமணக் கோலத்தில் மேடைக்கு வந்தார்.
சங்கர், தனக்கு இந்த மேடையில் திருமணம் செய்து வைக்குமாறு திருமாவளவனிடம் கேட்டுக்கொண்டார். தொண்டரின் வேண்டுகோளை ஏற்று திருமாவளவன், மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார்.
தேர்தல் பரப்புரை மேடை திருமண மேடையாக மாறியது. அந்த நிகழ்வு பொதுமக்களிடையே மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியது.

