தூத்துக்குடி: யாசகம் பெற்றதில், சிறுகச் சிறுகச் சேர்த்து மொத்தமாக ஒரு கோடி ரூபாயைத் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் பூல்பாண்டியன் என்ற 75 வயது முதியவர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், ஆலங்கிணறுப் பகுதியைச் சேர்ந்த அவர், யாசகம் பெறுவதையே முழுநேர வேலையாகச் செய்துவருகிறார். அதன்மூலம் கிடைக்கும் தொகையில் பொதுநலன் சம்பந்தப்பட்ட பல்வேறு நல்ல காரியங்களில் ஈடுபடுகிறார்.
மதுரை, நெல்லை, நாகர்கோவில் எனப் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் அவரை அவ்வப்போது பார்க்க முடியும். கொவிட் தொற்றுப்பரவல் காலகட்டத்தில் மதுரைக்கு வந்த பூல்பாண்டியன், அம்மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 50,000 வழங்கியிருந்தார்.
அதேபோல் மேலும் பல மாவட்டங்களுக்குச் சென்று ஆயிரம், லட்சம் என்று தன்னால் இயன்ற தொகையை நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளார். அவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி ரூபாயைப் பொதுநலனுக்காக வழங்கியுள்ளார் முதியவர் பூல்பாண்டியன்.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி மதுரையில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு அம்மாவட்ட ஆட்சியரிடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்.
இந்நிலையில், மீண்டும் ஆட்சியரைச் சந்தித்து அவர் 10,000 ரூபாய் வழங்கியதைக் கண்டு பலருக்கு வியப்பு ஏற்பட்டது.
ஒரே வாரத்துக்குள் மீண்டும் எப்படி அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடிந்தது என்று அவரிடம் சிலர் கேட்டுள்ளனர்.
தாம் யாசகம் பெற்று முதல்வர் நிதிக்கு ஆட்சியர் மூலம் பணம் வழங்குவதில் ஊடகங்களில் செய்தியாகப் பார்த்த பலர், தம்மைத் தேடிவந்து பணம் தருவதாக விளக்கம் அளித்துள்ளார் பூல்பாண்டியன்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஒரு வாரமாக மதுரை, நெல்லை, பெங்களூரு சந்தைகளில் யாசகம் பெற்றே இம்முறையும் ஆட்சியரிடம் ரூ. 10,000 வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

