கொளத்துார்: இலவச வாக்குறுதிகள் அளிக்கும் அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, சென்னையில் தாயும் மகளும் சுயேச்சை வேட்பாளர்களாக வரும் 23ஆம் தேதி நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜவஹர் நகரில் வசிப்பவர் விஜயலட்சுமி, 43. சமூக ஆர்வலர். அவரது மகள் ஸ்டெபி, 26, வழக்கறிஞர்.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ‘படகு’ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் மகள் ஸ்டெபி.
தாய் விஜயலட்சுமி ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் அன்பரசன் (திமுக), அதிமுக வேட்பாளர் சரவணனை எதிர்த்து சுயேச்சையாகக் களம் காண்கிறார்.
“மக்களிடம் வரியாகப் பணத்தைப் பிடுங்கிவிட்டு, வாக்குக்காக இலவச வாக்குறுதிகளைத் தரும் திறனற்ற அரசியலை நாங்கள் வெறுக்கிறோம். எந்தப் பொய்யான வாக்குறுதிகளையும் நாங்கள் தரப்போவதில்லை; நேர்மையாகச் செயல்படுவதே எங்கள் நோக்கம்,” என வழக்கறிஞர் ஸ்டெபி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே வீரப்பனின் மனைவி, மகள் தேர்தல் களத்தில் இருக்கும் நிலையில், தற்போது சென்னையிலும் ஒரு தாய் - மகள் கூட்டணி சுயேச்சையாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

