ஆலங்குளம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் அதிரடிப் புகாரை அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாகப் பண விநியோகம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தேர்தல் ஆணையம் இதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மூன்று தொகுதிகளுக்குக் குறி
குறிப்பாக, ஆலங்குளம், மயிலாப்பூர், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் பெருமளவில் பணம் வழங்கப்பட்டதற்கான காணொளி, ஒலிப்பதிவு ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.
முறைகேடுகள் நடந்துள்ள இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தலை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
“பணப்பட்டுவாடாவில் தொடர்புடைய வேட்பாளர்களை எதிர்காலத்தில் போட்டியிட முடியாதவாறு தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.
“முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை வழங்கவேண்டும்.
“இதுபோன்ற சூழலில் தேர்தலைத் தொடர்ந்து நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால், கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆணையம் எடுக்க வேண்டும்,” என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் தேர்தலைத் தொடர்ந்து நடத்துவது சுதந்திரமான, நேர்மையான தேர்தலைத் தடம்புரளச் செய்துவிடும்.
தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளைத் தீவிரப்படுத்தி, பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவேண்டும் என்றும் தவறு செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

