கும்பகோணம்: பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்தில் அத்திவரதர் சிலையை பக்தர்கள் தரிசிக்க அச்சிலை வைக்கப்பட்டுள்ள கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில்களில் அத்திவரதர் சிலை உள்ளது. இவற்றுள் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும்.
மொத்தம் 48 நாள்களுக்கு பக்தர்கள் சிலையை நேரில் கண்டு வழிபட முடியும்.
அதேபோன்ற நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலிலும் நடைபெறுவது வழக்கம். அக்கோவிலின் பாதாள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டு வருவார்கள். அதன் பின்னர் பத்து நாள்களுக்கு அச்சிலையை பக்தர்கள் நேரில் கண்டு வழிபடலாம்.
அந்த வகையில், எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பத்து நாள்களுக்கு அத்திவரதர் சிலையைப் பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு அத்திவரதர் சிலை பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கடந்த 1915ஆம் ஆண்டு வரை வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அச்சிலையைப் பக்தர்கள் எந்தவிதத் தடையுமின்றி வழிபட்டனர். அதன் பின்னர், சில காரணங்களால் அந்தச் சிலை பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்படவில்லை. 98 ஆண்டுகளுக்கு பிறகுதான் அத்திவரதர் சிலை மீண்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக 2013ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.
கடந்த முறை அத்திவரதர் சிலையைத் தரிசிக்க கட்டுக்கடக்காத பக்தர் கூட்டம் கூடியது.


