சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் காலை முதலே பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். வயதானவர்கள் கூட வரிசை பிடித்து வாக்களித்தனர். ஆனால் திரைப்பிரபலங்களில் பலர் வரிசையில் நிற்காமல் வாக்களித்துள்ளனர்.
நடிகர் அஜித் முதல் ஆளாக காலை 6.58 மணிக்கே ஓட்டளித்தார். பெரும்பாலும் இவர் வரிசையில் நின்று தான் ஓட்டளிப்பார். இந்தமுறை அவர் வரிசையில் நிற்கவில்லை. காலை 7 மணி அளவில் சென்னை திருவான்மியூர், பாரதிதாசன் பள்ளியில் அஜித்குமார் வாக்களித்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னதாகவே வாக்களிக்க அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.
நடிகரும், தவெக., தலைவருமான விஜயும் வரிசையில் நிற்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ரஜினி, திரிஷா, இளையராஜா, விக்ரம், துருவ் விக்ரம், ஷங்கர், அதிதி உள்ளிட்ட பல திரையுலகினரும் வரிசையில் நிற்காமல் வாக்களித்துச் சென்றனர்.
வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்து கைகாட்டிவிட்டு, நேராக உள்ளே சென்று வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிவிட்டுச் சென்றனர்.
புகழ்பெற்றவர்கள் வரிசையில் நிற்கும்போது கூட்டம் கூடுகிறது. அதனால் பிரச்சினை ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களை நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கின்றோம் என்று காவல்துறையினர் கூறினர்.
எனினும், சிலர் கால்கடுக்க வரிசையில் நின்றனர்.
நடிகர் ஜீவா இரண்டு மணிநேரம் காத்திருந்து வாக்களித்தார். பிரபு, விக்ரம் பிரபு, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, குஷ்பு, சுந்தர் சி, டி ராஜேந்தர், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி, ஹரிஷ் கல்யாண், ஜெய், பிரதீப் ரங்கநாதன், வரலட்சுமி, பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ராதிகாவுடன் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார்.

