சென்னை: தமிழ்நாட்டில் வணிக ரீதியான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்கீடு உடனடியாக 70 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய எண்ணெய் கழகத் தலைவர் ஏ.எஸ். சஹானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எரிபொருள் நிலைமை குறித்து, இந்திய எண்ணெய் கழகத் தலைவர் ஏ.எஸ். சஹானி சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) ஆய்வு செய்தார்.
“சுத்திகரிப்புத் திறன்கள் ஏறத்தாழ முழு அளவில் இருப்பதால் பெட்ரோல், டீசல், விமானத்துக்கான எரிபொருள் உட்பட திரவ எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை,” என்று திரு சஹானி செய்தியாளர்களிடம் கூறினார்.
“நாள்தோறும் ஏறக்குறைய 500,000 எரிவாயுக் கலன்கள் என்ற தமிழகத்தின் சமையல் எரிவாயுத் தேவையை 100 விழுக்காடு பூர்த்தி செய்யும் நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. வீட்டுப் பயன்பாட்டுச் சமையல் எரிவாயுவிற்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
சில பகுதிகளில் ஆறு முதல் எட்டு நாள்கள்வரை காத்திருப்புக் காலம் இருப்பதைக் குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திரு சஹானி குறிப்பிட்டார்.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியப் பகுதிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் 100 விழுக்காட்டுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
“சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 20 நாள்கள்வரை காலதாமதம் ஏற்படுவது தொடர்பாக விரிவானப் பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாள்களில் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்,” என்று திரு சஹானி நம்பிக்கை தெரிவித்தார்.
தொடரும் அமலாக்க நடவடிக்கைகள்
இதற்கிடையே, எரிவாயுக் கலன் பதுக்கலைத் தடுக்கத் தமிழக அரசு 10,000க்கும் அதிகமான திடீர் அமலாக்கச் சோதனைகளை மேற்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் 1,500க்கும் அதிகமான திடீர் சோதனைகளைத் தமிழகம் முழுவதும் மேற்கொண்டன.
மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதிய கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளதால், எரிபொருள் வாங்குவது தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

