குலசேகரன்பட்டினத்தில் குவிந்த 10 லட்சம் பக்தர்கள்

குலசேகரன்பட்டினத்தில் குவிந்த 10 லட்சம் பக்தர்கள்

1 mins read
02ba3d04-2f4d-4648-9519-1e30777e27ac
விழாவில் பங்கேற்க மாறுவேடமிட்டு வந்த கலைஞர்கள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இடம்பெறும் மகிசா சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி குலசேகரன்பட்டினத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 10 நாள்கள் தசரா திருவிழா நடப்பது வழக்கம்.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருவது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு நாள்களாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊர் காவல்படையினரையும் சேர்த்து 4,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இதுதவிர மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த குற்றப்பிரிவு காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர் என்றும் ஒன்-இந்தியா ஊடகச் செய்தி தெரிவித்தது.

தசரா உடை அணிந்த காவலர்கள் ரகசிய கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத் துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினரும் குலசையில் முகாமிட்டிருந்ததாக மாலை மலர் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
விழாதூத்துக்குடிகாவல்துறைபாதுகாப்பு