எதிரணி ரசிகர்களுக்கு ‘பியர்’ வழங்கி நன்றி தெரிவிக்கும் காற்பந்துக் குழு

எதிரணி ரசிகர்களுக்கு ‘பியர்’ வழங்கி நன்றி தெரிவிக்கும் காற்பந்துக் குழு

1 mins read
62d4ee01-7fcf-4571-8b9a-246ee229096d
நேப்பல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கோமோவை 3-1 எனும் கோல் கணக்கில் நேப்பொலி வீழ்த்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கோமோ: இத்தாலியின் ஆக உயரிய நிலை காற்பந்து (Serie A) லீக் போட்டிக்குத் தன்னை அன்புடன் வரவேற்ற நேப்பொலி ரசிகர்களை மகிழ்விக்க லீக் போட்டிக்குப் புதிதாகத் தகுதி பெற்ற கோமோ குழுவின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதியன்று நேப்பல்ஸ் நகரில் நேப்பொலியின் விளையாட்டரங்கில் கோமோ களமிறங்கியபோது அக்குழுவை வரவேற்கும் வகையில் நேப்பொலி ரசிகர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் ஆட்டமொன்றில் இவ்விரு குழுக்களும் மீண்டும் மோதவுள்ளன.

அந்த ஆட்டம் கோமோவின் கியூசிப்பி சினிகாக்லியா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

அப்போது, நேப்பொலி அரங்கில் தங்களுக்குக் கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது விளையாட்டரங்கிற்கு வரும் அக்குழு ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச பியர் வழங்கப்படும் என்று கோமோ குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேப்பல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கோமோவை 3-1 எனும் கோல் கணக்கில் நேப்பொலி வீழ்த்தியது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலிய முதல்நிலை லீக்கில் களம் கண்டுள்ள கோமோ, இதுவரை நடந்த ஏழு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

எட்டுப் புள்ளிகளுடன் லீக் பட்டியலில் அது 14வது இடத்தில் உள்ளது.

முன்னாள் ஆர்சனல், பார்சிலோனோ நட்சத்திரமும் ஸ்பானிய விளையாட்டாளருமான செஸ்க் ஃபேப்ரிகாஸ், கோமோ குழுவின் நிர்வாகியாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்