பெர்லின்: ஆட்டம் தொடங்குவதற்குமுன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஜெர்மானியக் காற்பந்து வீரர் நிக்லஸ் ஃபுவல்கிரக் உதைத்த பந்தால் ரசிகர் ஒருவரின் கை முறிந்துபோனது.
ஜெர்மனியில் யூரோ 2024 காற்பந்துப் போட்டிகள் நடந்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடந்த ஆட்டத்தில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.
ஆட்டம் தொடங்கும் முன்னரே கய் ஃபிளத்மன் என்ற ரசிகரின் கை முறிந்துபோனதால் ஆட்டத்தைக் காண முடியாமல் அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
கையில் கட்டுடன் மருத்துவமனையில் இருக்கும் படத்தைத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் கய்.
“சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து பில்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.ஜெர்மானியக் காற்பந்துச் சங்கம் என்னுடன் தொடர்பிலுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
அந்த ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கோலடித்தவர்களில் ஃபுவல்கிரக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

