பலரையும் தமிழ் படிக்க வைக்கும் தமிழ் முரசு மின்னிதழ்

பலரையும் தமிழ் படிக்க வைக்கும் தமிழ் முரசு மின்னிதழ்

3 mins read
a74c119f-3b1a-4e28-a667-f3a8449379ac
மனைவி, மகளுடன் கைக்கணினியில் தமிழ் முரசு வாசிக்கும் திரு சண்முகம். படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

கி.ஜனார்த்தனன்

கடைக்குச் சென்று தமிழ் முரசு வாங்குவது 81 வயது சண்முகம் வைத்தியநாதனின் அன்றாடச் செயல்களில் ஒன்று. கொவிட்-19 கிருமிப்பரவல் நேரத்தில் அவர் வெளியே செல்வதை விரும்பாத அவரது 54 வயது மகள் சாந்தி சண்முகம் அவருக்கு கைக்கணினியுடன் வரும் தமிழ் முரசு மின்னிதழ் சந்தாவை வாங்கிக் கொடுத்தார்.

கைக்கணினியில் எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்க மகளிடம் தெரிந்து கொண்ட திரு சண்முகத்திற்கு, காலை யில் எழுந்த உடனேயே தமிழ் முரசு படிக்க முடிவது வசதியாக இருக்கிறது.

எல்லா வகையிலும் புதிய தொழில் நுட்பங்களுக்கு மாறி, செய்தி வழங்கலை யும் மின்னிலக்கமாக்கியுள்ள தமிழ் முரசு புதிய வாசகர்களையும் ஈர்த்து வருகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மின்னிதழ்களுடனான கைக்கணினிச் சந்தா திட்டத்தில் பலர் சேர்ந்துள்ளனர்.

லாரி ஓட்டுநரான 51 வயது எல். ரமேஷ்குமார் தமிழ் முரசு வாசகரல்ல. கைக்கணினியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் தமிழ் முரசும் இணைந்து வழக்கப்பட்டதால் முரசு படிக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. "இனி தமிழிலும் நிறைய வாசிப்பேன்," என்று இவரைப் போல் பலரும் குறிப்பிட்டனர்.

பொறியாளரான 45 வயது சிவகுமார் சிவஞானம், கொரோனா கிருமிப்பரவல் நேரத்தில் வீட்டில் இருக்கும் தமது இரு பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மின்னிதழ்களுடனான கைக் கணினிச் சந்தா திட்டத்தில் சேர்ந்தார்.

தொலைக்காட்சிச் செய்திக்கு ஈடான சுவாரஸ்யத்தை கைக்கணினி தமது பிள்ளைகளுக்கு வழங்குவதாகக் கூறிய அவர், சொல்வளம், உச்சரிப்பு, தகவல்களை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த செய்திதாட்களைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 நோய்ப் பரவல் இவரைப் போல் பலரையும் மின்னிலக்க இதழுக்கு மாற வைத்துள்ளது.

சிங்கப்பூரில் தமிழ்ப் புழக்கம் தொடர வேண்டும் என்பதற்காக தமிழ் முரசு சந்தாவைப் பெற்ற 45 வயது முரளி ஜோதிநாத், "தமிழ் முரசு மின்னிதழும் வெளியிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்றார். இந்த ஏற்பாடு சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பது அவர் கருத்து.

வழக்கமாக வீட்டுக்குக் கீழே இருக்கும் கடைக்குச் சென்று செய்தித்தாள் வாங்கும் மின்னியல் பொறியாளரான எல்லையப்ப கவுண்டர், 64, கிருமிப் பரவல் முறியடிப்பு காலத்தில் வெளியே செல்வதைத் தவிர்த்தபோது, ஆங்கில, தமிழ் பத்திரிகைகளின் மின்னிதழ் சந்தாவைப் பெற்றார்.

தமிழ் முரசில் சிறுகதைகளை விரும்பிப் படிக்கும் இவருக்கு எங்கும் எடுத்துச் செல்ல முடிவது, வெளிச்சத்தைக் கூட்டிக் குறைப்பது, பழைய இதழ்களைப் படிப்பது என்று கைக்கணினி பல வகையிலும் வசதியாக இருக்கிறது.

எனினும், 50 வயது தமிழ் ஆசிரிய ரான கமலாதேவிக்கு செய்தித்தாளைப் புரட்டிப் படிப்பதுதான் திருப்தியாக இருக்கிறது. "கைக்கணினி எனக்கு ஒத்து வரவில்லை. இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் அச்சு இதழ் சந்தாதாரர் ஆகலாம் என எண்ணு கிறேன். என் மகளுக்குத்தான் கைக்கணினி மூலம் படிக்க பிடித்துள்ளது," என்றார் அவர்.

தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மின்னிதழ்களுடனான கைக்கணினிச் சந்தா திட்டத்தில் பலர் சேர்ந்துள்ளனர். தமிழ் முரசின் மின்னிதழ் + அச்சு இதழுக்கான சந்தா, அச்சு இதழுக்கான சந்தா, மின்னிதழுக்கான சந்தா ஆகியவையும் உள்ளன.