மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் வோங்

மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் வோங்

2 mins read
இளையர்களைக் குறிவைத்து செங்காங்கில் பேசிய பிரதமர்
abf64292-dec4-4a50-a2a0-03e4bee67ffb
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16ஆம் தேதி) நடைபெற்ற செங்காங் வெஸ்ட் வட்டாரத்தின் விளையாட்டு, குடும்ப விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

குடும்பங்களுக்கு உகந்ததாக ​சிங்கப்பூர் சமுதாயம் இருக்க, தேவையான அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

“​இங்கிருக்கும் அனைத்து இளம் பெற்றோர்க்கும் நான் கூறுவது இதுதான்: உங்களுக்கு ஆதரவு வழங்கவே நாங்கள் இருக்கிறோம் என்ற உறுதிமொழியை நான் உங்களுக்கு வழங்குகிறேன்,” என்று நேற்று செங்காங் குடியிருப்புப் பேட்டைக்குச் சென்ற பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

பிரதமரானபின் அவர் செங்காங் சென்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராகப் பொறுப்பேற்றபின் லாரன்ஸ் வோங் முடிந்தவரை சிங்கப்பூரர்கள் பலரைச் சந்திக்கும் நோக்கத்துடன் பல தொகுதிகளுக்குச் சென்று வந்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.   ​செங்காங்கில் இளம் பெற்றோர்களுடனான சந்திப்பு நிகழ்வில் அவருடன் அந்தத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்கள் டாக்டர் லாம் பின் மின், இணைப் பேராசிரியர் எல்மி நெக்மாட், திருவாட்டி தியோடோரா லாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.  ​அப்பொழுது, இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இளம் பிள்ளைகள் உள்ள பெற்றோர்க்கு ஆதரவு தரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் சுட்டினார்.

“​வாழ்க்கைச் செலவினம் நெருக்குதல் இருப்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் கூடுதல் சிடிசி பற்றுச்சீட்டுகளை வழங்கியுள்ளோம். அத்துடன், எஸ்ஜி60 தொகுப்பிலும் வயது வந்த அனைத்து சிங்கப்பூரர்களுக்கும், அவர்களுக்கு உதவும் நோக்கத்துடனே சில பற்றுச்சீட்டுகளை வழங்கியுள்ளோம்,” என்று ஆங்கர்வேல் வில்லேஜ் கடைத்தொகுதியில் உள்ள கம்யூனிட்டி பிளாசாவில் அவர் உரையாற்றியபோது விளக்கினார். ​இளம் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும். அதற்காகவே, 12 வயதுக்குக்கீழ் உள்ள சிங்கப்பூர் பிள்ளைகளுக்கு எஸ்ஜி லைஃப் திட்டத்தின்கீழ் ஒருமுறை வழங்கப்படும் $500 வழங்கப்படுவதாக திரு லாரன்ஸ் வோங் கூறினார்.  ​மூன்று அல்லது நான்கு பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி கிடைக்கும் என்று நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

பெரிய குடும்பங்களுக்காக வகுக்கப்பட்ட திட்டத்தின்கீழ் பாலர் பள்ளி, சுகாதாரப் பராமரிப்புச் செலவுக்கெனப் புதிதாகக் கூடுதல் உதவித் தொகையாக $10,000 மூன்றாவது, நான்காவது அதற்கு அடுத்ததாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.  அத்துடன், மூன்றாவதும், அதற்கும் அடுத்ததாகப் பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் அவர்கள் ஒன்றிலிருந்து ஆறு வயது ஆகும் வரையில் ஒவ்வோர் ஆண்டும் எஸ்ஜி லைஃப் திட்டத்தின்கீழ் $1,000 வழங்கப்படும் என்று பிரதமர் விளக்கினார். 

குறிப்புச் சொற்கள்