சிங்கப்பூரில் தற்போது மூன்றில் இரு கட்டடங்கள் பசுமை அம்சங்களைக் கொண்டுள்ளன.
அதனால் கட்டடத் துறை, சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030ன் இலக்குகளை அடையும் பாதையில் இருக்கிறது.
2030ஆம் ஆண்டுக்குள் 80 விழுக்காட்டுக்குக் கட்டடங்கள், கட்டட, கட்டுமான ஆணையம் வழங்கும் பசுமை முத்திரையைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது சுற்றுச்சூழலுக்கான நீடித்த நிலைத்தன்மை விதிமுறைகளைப் பூர்த்திசெய்யவேண்டும் என்பதே இலக்கு. வீடமைப்பு, வர்த்தகக் கட்டடங்களுக்கு பசுமை முத்திரை வழங்கப்படுகிறது.
அந்த விதிமுறைகளில் ஒன்று, தற்போதுள்ள மற்றும் புதிய கட்டடங்களில் இருக்கும் குளிரூட்டி நிலையங்கள் (chiller plants) எரிசக்தியை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்துவது உறுதிசெய்யப்படவேண்டும்.
அது, சிங்கப்பூர்ப் பசுமைக் கட்டடப் பெருந்திட்டத்தின்கீழ் கட்டடத் துறைக்கென வரையப்பட்டுள்ள மூன்று இலக்குகளில் ஒன்றாகும்.
புதிய கட்டுமானத் திட்டங்களில் 80 விழுக்காட்டுக்குக் கட்டடங்கள் மிகவும் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்துபவையாக (எஸ்எல்இ) இருப்பது, 2005ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் ஆகச் சிறந்த பசுமைக் கட்டடங்கள் 80 விழுக்காடு குறைவாக எரிசக்தியைப் பயன்படுத்துவது ஆகியவை 2030ஆம் ஆண்டுக்கான மற்ற இலக்குகளாகும்.
அதன்படி, மிகவும் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தும் கட்டடங்கள் 2005ல் பயன்படுத்தப்பட்டதைவிட குறைந்தது 60 விழுக்காட்டு எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தவேண்டும்.
‘எஸ்எல்இ’ அங்கீகாரம்
தற்போது 30 விழுக்காட்டுக்கும் மேலான புதிய கட்டடங்கள் எஸ்எல்இ அங்கீகாரம் பெற்றுள்ளன. அத்துடன், இன்றைய நிலவரப்படி ஆகச் சிறப்பான பசுமைக் கட்டடங்கள், 2005ல் இருந்தவற்றைவிட 72 விழுக்காடு குறைவாக எரிசக்தியைப் பயன்படுத்துகினறன.
சிங்கப்பூரின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 20 விழுக்காடு, கட்டடத் துறையிலிருந்து வெளியாகிறது. மேலும், தொழில்துறைகளுக்கு அடுத்தபடியாகக் கட்டடத் துறைதான் ஆக அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடி, எரிசக்தி மீள்திறனின் முக்கியத்துவத்தைச் சரியான நேரத்தில் எடுத்துக்காட்டுவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வியாழக்கிழமை (ஜூலை 30) குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரின் எரிசக்தி விநியோகத் தொடரை வலுப்படுத்துவதையும் தாண்டி, சிக்கனமான எரிசக்திப் பயன்பாடு, எரிசக்திச் சேமிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதும், நமது எரிசக்தித் தேவையையும் செயல்பாட்டு அபாயங்களையும் சமாளிக்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்,” என்றும் அவர் விவரித்தார்.


