தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்டம் காரணமாகச் சனிக்கிழமை (ஜூலை 25) தேசிய விளையாட்டு அரங்கம் அருகே போக்குவரத்து பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், அன்றைய தினம் தேசியக் கல்வி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனாலும் சில மணி நேரம் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இரு நிகழ்வுகள் காரணமாகச் சில இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று காவல்துறை வியாழக்கிழமை (ஜூன் 23) அறிக்கை வெளியிட்டது.
சில சாலைகளில் செல்ல அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் காவல்துறை, அவசர உதவி வாகனங்களும் அடங்கும்.
காவல்துறை அதிகாரிகள், துணைக் காவற்படை அதிகாரிகள், சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டச் சாலை சந்திப்புகளில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் வாகன ஓட்டிகளுக்குச் சரியான வழியில் செல்ல உதவுவார்கள்.
போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத் திட்டங்களைச் சரியாகச் செய்யுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலைகள் தொடர்பான தகவல்களை 1800-637-2026 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுக்கொள்ளலாம். அல்லது தேசிய தின அணிவகுப்புக்கான இணையப்பக்கத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.


