சுவா சூ காங் வீட்டில் கறையான் தொல்லை: $8,000 மரச்சாமான்கள் வீண்

சுவா சூ காங் வீட்டில் கறையான் தொல்லை: $8,000 மரச்சாமான்கள் வீண்

2 mins read
17b3ce7d-8c3e-4a3e-94ad-4a469ecb125a
வீட்டுக்கு வெளியே இருக்கும் தீயணைப்புக் குழாயில் இருந்து தமது வீட்டுக்குள் கறையான்கள் புகுந்திருக்கலாம் என்று அந்த வீட்டில் வசிக்கும் பெண் தெரிவித்துள்ளார். - படம்: ஷின் மின்
Google News Preferred Icon

சுவா சூ காங்கில் உள்ள ஐந்தறை வீடு ஒன்றில் $8,000 மதிப்புள்ள அலமாரி போன்ற மரச்சாமான்களைக் கறையான்கள் சேதப்படுத்திவிட்டதாக ஷின்மின் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

68 வயது மூதாட்டி வசித்து வரும் அந்த வீட்டில் கறையான் தொல்லை இருந்து வந்துள்ளது.

வீட்டிற்கு வெளியே உள்ள தீயணைப்புக் குழாயிலிருந்து தமது வீட்டுக்குக் கறையான்கள் வந்துவிட்டதாகக் கூறினார் சென் என்று தமது பெயரை சொல்லிக்கொண்ட அந்த மூதாட்டி.

சுவா சூ காங் நார்த் 7, புளோக் 619ல் உள்ள தீயணைப்புக் குழாயை மூடியிருக்கும் மரக்கதவில் சில ஆண்டுகளுக்கு முன்னதாகத் தாம் கறையான்களைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.

அப்போது நகரமன்றத்திற்கு அது பற்றி தாம் தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து உடனடியாக ஊழியர்கள் வந்து தீயணைப்புக் குழாய் பகுதியில் மருந்து அடித்ததாகவும் சென் கூறினார்.

மேலும், மரக்கதவை எடுத்துவிட்டு அலுமினியக் கதவை அவர்கள் அப்போது பொருத்தினர்.

ஆயினும், மருந்துகளால் உயிரிழக்காத கறையான்கள் தமது வீட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்று அவர் சந்தேகப்படுகிறார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் தமது வீட்டுக்கு வெளியே இருந்த மரக்கதவு ஒன்றில் கறையான்களைக் கண்ட அவர், வீட்டுக்குள்ளேயும் வந்துவிட்டதை உணர்ந்தார்.

காலணி அலமாரி, சமையலறை அலமாரிகள், தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டி போன்றவற்றை கறையான்கள் அரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தீயணைப்புக் குழாயில் மருந்துக்குப் பலியாகாத கறையான்கள் வீட்டுக்கு வெளியே இருந்த காலணி அலமாரிக்கு வந்து, பின்னர் வீட்டுக்குள் புகுந்துவிட்டதாக அவர் கருதுகிறார்.

காரையானகள் அரித்துவிட்ட மரச் சாமான்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மாற்ற தமக்கு $8,000 செலவானதாக அந்த மூதாட்டி கூறியதாக ஷின் மின் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட புளோக்கிற்கு ஷின் மின் செய்தியாளர் சென்று பார்த்தபோது தங்கள் வீடுகளில் கறையான் தொல்லை இல்லை என்று அவரிடம் கூறினர். இருப்பினும், அது பரவக்கூடும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கறையான்கள் பற்றிய தகவல் அறிந்ததும் அதுகுறித்து வருந்துவதாக மார்சிலிங்-இயூ டீ நகர மன்றம் கூறியிருந்தது.

கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு கறையான் பிரச்சினை தமது புளோக்கில் உருவெடுத்ததாக 53 வயது ஆசிரியர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்