மூத்த குடிமக்களைத் தொடர்ந்து கவனிப்போம்: பிரதமர் வோங்

மூத்த குடிமக்களைத் தொடர்ந்து கவனிப்போம்: பிரதமர் வோங்

2 mins read
5137ef8e-af60-4ab4-ba5d-b6e68c0da43c
மூத்த குடிமக்கள் துடிப்புடன் இருக்க ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டம், மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி ஆகிய திட்டங்கள் உள்ளன என்பதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் மூத்த குடிமக்களின் தியாகத்திற்கும் பங்களிப்பிற்கும் பிரதமர் லாரன்ஸ் வோங், தேசிய தினப் பேரணி உரையின்போது நன்றி தெரிவித்தார்.

வாழ்க்கையில் கடுமையான சவால்களைச் சந்தித்தவர்கள் மூத்த குடிமக்கள். இருப்பினும் தங்களது குடும்பத்தையும் அடுத்த தலைமுறையையும் சிறப்பாக வளர்க்க அவர்கள் முடிந்த அளவு பாடுபட்டனர் என்ற அவர், தமது தாயாரைப் பற்றிக் குறிப்பிட்டார்.

பல மூத்த குடிமக்களைப் போல் எனது தாயாரும் ஜப்பானிய ஆட்சி காலத்திலும் சிங்கப்பூர் ஆரம்பக் கட்டத்தில் எதிர்நோக்கிய சவாலான சூழ்நிலையில் வாழ்ந்தவர்.

தடுமாறும் தமது குடும்பத்திற்கு உதவும் நோக்கத்தில் சிறு வயதில் இருந்தே வேலைக்குச் சென்றார். இருப்பினும் கல்வியை விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்து, கடுமையாக போராடி படித்து ஆசிரியர் ஆனார்

பல போராட்டங்களை எதிர்கொண்ட அவர் சிக்கனமாகச் செலவு செய்வார். குடும்பத்தின் நிதிச் சூழல் சிறப்பாக இருந்தும் அவர் வீட்டு வேலைக்கு பணிப்பெண் வைக்கவில்லை.

முழுநேர வேலை செய்துகொண்டே என்னையும் என் சகோதரரையும் கவனித்துக் கொண்டார். தற்போது அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. இப்போதும் அவர் தமது வேலைகளை தாமே செய்துகொள்ளவே விரும்புகிறார்,” என்று திரு வோங் தமது தாயாரை நினைவுகூர்ந்தார்

இது முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் தன்னம்பிக்கை,மீள்தன்மையை காட்டுகிறது. அவர்கள் சவால்களை கண்டு அஞ்சுவதில்லை. முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாக ஓய்வுபெற அரசாங்கம் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் துடிப்புடன் இருக்க ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டம், மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி ஆகிய திட்டங்கள் உள்ளன.

முதியோரின் தேவைகளை நானும் எனது குழுவும் தொடர்ந்து கவனித்து வருவோம், அதனால் மூத்த குடிமக்கள் பொன்னான காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்