அங் மோ கியோ வளாகத்தை மேம்படுத்த $340 மி. செலவிடும் ஆப்பிள்

அங் மோ கியோ வளாகத்தை மேம்படுத்த $340 மி. செலவிடும் ஆப்பிள்

3 mins read
58559058-49ab-47fd-945a-d71adc432755
ஓவியரின் கைவண்ணத்தில் அங் மோ கியோ வளாகம். - படம்: ஆப்பிள்
Google News Preferred Icon

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வட்டார செயல்பாட்டு மையமாகத் திகழும் அங் மோ கியோ வளாகத்தைப் புதுப்பிக்கவும் விரிவுபடுத்தவும் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (340 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அதிகமாகச் செலவிடப்படவுள்ளது.

விரிவடைந்து வரும் ஊழியரணியின் தேவைகளுக்காக 2022ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட இரு கட்டடங்கள் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டது. அக்கட்டடங்கள் அங் மோ கியோ ஸ்திரீட் 64ல் உள்ள அதன் பிரதான கட்டடத்தின் எதிரே அமைந்துள்ளன.

புதுப்பிப்புப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளன.

நிறுவனம் தனது முதல் வசதியை 1981ஆம் ஆண்டில் 72 ஊழியர்களுடன் சிங்கப்பூரில் திறந்தது. அப்போதிலிருந்து அதன் செயல்பாடுகள் இங்கு விரிவடைந்து வருகின்றன. தற்போது சிங்கப்பூரில் 3,600 ஊழியர்களை அந்நிறுவனம் கொண்டுள்ளது.

தற்போது, மென்பொருள், வன்பொருள், சேவைகள், ஆதரவு உள்ளிட்டவற்றின் நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கை மையமாக சிங்கப்பூர் செயல்படுகிறது. ஆர்ச்சர்ட் ரோடு, மரினா பே சேண்ட்ஸ், ஜுவல் சாங்கி விமான நிலையம் ஆகிய இடங்களில் மூன்று ஆப்பிள் கடைகளும் உள்ளன.

“புதிய விரிவாக்கமானது, ஆப்பிளின் 40 ஆண்டுகளுக்கும் மேலான வேலை உருவாக்கம், உள்ளூர் சமூகத்துடன் ஆழமான பிணைப்பை வளர்ப்பதில் அண்மைய மைல்கல்லாகும். மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளின் வளர்ச்சிக்கு இம் வழங்கும்” என்று ஆப்பிள் கூறியது.

நேரடி வேலைவாய்ப்பு, அதன் விநியோக சங்கிலி, ஐஓஎஸ் செயலி பொருளியல் ஆகியவற்றின் மூலம் 60,000க்கும் மேற்பட்ட வேலைகளை வழங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அதன் வசதிகள், ஆய்வகங்களை மேம்படுத்தியுள்ளது. வன்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இடவசதி 2019 முதல் 50 விழுக்காடு விரிவடைந்துள்ளது.

“சிங்கப்பூர் உண்மையிலேயே ஒரு தனித்தன்மையான இடம். படைப்பாளிகள், கற்றுக்கொள்பவர்கள், இலக்குடையவர்களைக் கொண்ட துடிப்புமிக்க சமூகத்துடன் உருவாக்கியுள்ள தொடர்பு குறித்து பெருமைப்படுகிறோம்,” என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறினார்.

“விரிவடைந்து வரும் வளாகத்துடன், இங்கு ஆப்பிள் தனது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. சிங்கப்பூர் குழுக்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன,” என்றார் அவர்.

அதன் அனைத்து வசதிகளையும் போலவே, விரிவாக்கப்படும் புதிய வளாகமும் முழுமையாக மறுபயனீட்டு எரிசக்தியில் இயங்கும் என்று நிறுவனம் கூறியது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அதன் பெருநிறுவன நடவடிக்கைகளில் கரிம வெளியீடு இல்லாது செயல்பட்டு வருகிறது. அதன் அனைத்து வசதிகளிலும் 2018ஆம் ஆண்டு முதல் 100 விழுக்காடு மறுபயனீட்டு எரிசக்தியைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்தோனீசியாவில் ஒரு உற்பத்தி நிலையத்தை உருவாக்குவது குறித்து நிறுவனம் ஆராயும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை கூறினார்.

தற்போது அங்கு உற்பத்தி வசதிகளையும் ஆப்பிள் கொண்டிருக்கவில்லை. எனினும் 2018 முதல் செயலி மேம்பாட்டாளர் கல்விக் கழகங்களை அமைத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்