இளம் தொண்டூழியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்

இளம் தொண்டூழியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்

2 mins read
5fc0ba94-f4df-4622-bab3-1a21824fa80c
நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர். - படம்: சிங்கப்பூர் இளையர் படை
Google News Preferred Icon

தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.

 ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ்.
 ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ். - படம்: சிங்கப்பூர் இளையர் படை

தொண்டில் ஈடுபடுவதன் மூலம் தன்னலமின்றி நடந்துகொள்ள முடிவதாக ஃப்ரோடோ கருதுகிறார். உயர்நிலை பள்ளிப் பருவத்திலேயே ஃப்ரோடோ தொண்டில் ஈடுபடத் தொடங்கினார்.

இணைப்பாட நடவடிக்கையாக செயின்ட் ஜான்ஸ் படைப்பிரிவில் சேர்ந்த அவர் பின்னர் மூத்தோருக்குத் தொண்டு செய்யும் சேவைகளில் இறங்கினார். மூத்தோருக்குத் தம்மால் இயன்றவரை சேவையாற்ற வேண்டுமென்ற வேட்கையும் அவருக்குள் பிறந்தது.

‘ஓ’ நிலை தேர்வு முடிந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயில ஆரம்பித்த பிறகு ஃப்ரோடோ சிங்கப்பூர் இளையர் படையின் ‘யோல்டன்’ திட்டத்தில் சேர்ந்தார். அதில் அவர் மூத்தோருடன் நட்புறவு கொள்ளும் சேவையில் ஈடுபட்டார்.

பின்னர் சிங்கப்பூர் இளையர் படையின் தலைமைத்துவத் திட்டத்தின்கீழ் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தோடு கைகோத்து ‘டால்பின்ஸ்’ நண்பர் திட்டத்தில் சேர்ந்தார்.

அதிகம் பாதிக்கப்படக் கூடிய இளையர்களுக்கு தோள்கொடுக்கும் வகையில் பல திட்டங்களை குழுத் தலைவராக ஃப்ரோடோ வழிநடத்தினார்.

தொண்டூழியத்தில் தலைமைத்துவப் பொறுப்புகளைக் கையாள்வது ஃப்ரோடோவுக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், அதன் மூலம் குழுவை நிர்வகிப்பது, பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொள்வது போன்றவற்றை அவர் கற்றுக்கொண்டார்.

ஃப்ரோடோ உட்பட 150க்கும் மேற்பட்ட இளையர்கள் சிங்கப்பூர் இளையர் படை தொடக்க விழாவில் அங்கீகரிக்கப்பட்டனர். இளம் தலைவர்கள் ஒன்றிணைந்து 27 சமூகத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு அவர்கள் 1,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவியுள்ளனர்.

தேசிய இளையர் மன்றம் ஏற்பாட்டில் கரையோரப் பூந்தோட்டங்களில் சனிக்கிழமை (மார்ச் 30) இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தேசிய இளையர் மன்றத் தலைவருமான அவர், “நம்மைச் சுற்றி உலகில் பல துரதிருஷ்டவசமான நிகழ்வுகள் நடக்கின்றன. நாம் அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

“அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வது நம் கையில்தான் உள்ளது. அதற்கு தொண்டு மிக அவசியம். சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில், மூத்தோருக்கு சமூக ஆதரவளிக்க அதிக கரங்கள் தேவைப்படுகின்றன.

“தொண்டூழியர்களுக்குப் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பள்ளி மாணவர்களும் வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்டு தொண்டூழியம் போன்ற உன்னத நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

இளம் தலைவர் பிரிவில் அமைச்சரிடம் சான்றிதழ் பெற்ற ஃப்ரோடோ, “தொண்டூழியம் மூலம் நான் பிறரின் தேவைகளை முன்னிறுத்தக் கற்றுக்கொண்டேன்.

“பட்டயக் கல்வியை முடித்தவுடன் தேசிய சேவைக்கு சென்றாலும் நான் வாரயிறுதியில் தொண்டூழியத்தில் ஈடுபடுவேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்